Sunday, December 15, 2013

குழந்தைக்கு நீ தாயல்ல!

குழந்தைக்கு நீ தாயல்ல!
மனப் போராட்டம்
நன்றி: டாக்டர் விகடன்
 

இதை கருவாகக் கொண்டு எழுதிய கதையே  "பணம் காட்டும் நிறம்"


சேலத்தைச் சேர்ந்தவர் 32 வயதான லட்சுமி. (ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு குழந்தைகள். கணவருடன் சேர்ந்து நாள் முழுக்க கூலி வேலை செய்தாலும் கிடைப்பது என்னவோ, 300 ரூபாய்தான். இந்தச் சொற்ப வருமானத்தில், குழந்தைகளைப் படிக்கவைக்கவோ விரும்பியதை வாங்கித் தரவோ வழி இல்லை. சென்ற வருடம் தன் நான்கு வயது மகனுக்குக் காய்ச்சல் அதிகமாக, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த, நர்ஸ்களிடம், மருந்து வாங்கக்கூட முடியாத தன் இயலாமையைப் பகிர்ந்துகொண்டார். அங்கிருந்தவர்கள் லட்சுமியிடம், 'வாடகைத் தாய்’ பற்றி சொல்லி இருக்கின்றனர். 'கர்ப்பக்காலம்’ முழுவதும் ஆகும் செலவை ஏற்றுக்கொள்வதுடன், இரண்டு லட்சம் பணமும் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை, வறுமையைப் போக்க உதவும் என்பதால், வாடகைத் தாய் ஆக முடிவு செய்தார் லட்சுமி. இப்போது அவர் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள். டெலிவரிக்காகக் காத்திருக்கிறார். 'என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையைப் பார்க்க முடியாது. என் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மீண்டும் பிரசவ வலியைத் தாங்கப்போகிறேன்’ என்கிறார் லட்சுமி.
 'வாழ்வை இனிமையாக்க ஒரு வாரிசு வேண்டும்’ என்று ஏங்குபவர்கள் பலர். திருமணமான தம்பதிகளில் நூற்றில் 10 பேர் கருவுறுதலில் பெரும் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். குழந்தை பெற வழியில்லாமல் போகும் பெரும்பாலான தம்பதிகள், நாடுவது 'வாடகைத் தாய் முறை’ என்ற சரோகசி (Surrogacy) முறையைத்தான். இந்த முறை, 'அம்மா என்ற தொப்புள்கொடி பந்தத்தைக்கூட விலை கொடுத்து வாங்கிவிடலாம்’ என்பது வேதனைக்குரியது.
'வாடகைத் தாய் முறை, வறுமையில் வாடும் பெண்களுக்கு என்னதான் வருமானத்தைத் தந்தாலும், வேதனையைத்தான் அவர்கள் அதிகம் சுமக்கின்றனர். இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் அல்ல' என்கிற மனநல மருத்துவர் ஷாலினி வாடகைத் தாயின் மனரீதியான விஷயங்களை அலசுகிறார்.
'வாடகைத் தாய் முறைக்கு, வறுமைதான் மிக முக்கியக் காரணம். எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தைக் கொடுத்து வலிகளிலிருந்து மீளத் துடிக்கும் உயர் வர்க்கத்தினர் ஒருபுறம் என்றால், அதிக வலிகளை சுமக்கவும் தயாராகி, பெற்ற பிள்ளைகளுக்கு ஓரளவாவது வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமே என்ற எண்ணத்தோடு வாடகைத் தாயாகத் தயாராகும் வர்க்கம் இன்னொருபுறம். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிக்கு குழந்தைச் செல்வமும், வாடகைத் தாயின் குடும்பத்துக்கு பணத் தேவையும் இருப்பதால், இரு தரப்பினரும் இணைந்து ஒப்பந்தம் போட்டு குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராகிறார்கள்.
இந்த நிலை இல்லாமல், சுயமாக சில மீடியேட்டர்கள் மூலமாகச் செயல்படும்போதுதான் அங்கு சிக்கல்கள் உருவாகின்றன. பெரும்பாலானோர், உறவினர்கள், தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தற்போது வாடகைத் தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப்பட்டுள்ளதே தவிர, இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
மனமும் உடலும்!
குழந்தையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத தம்பதிக்கு ஒரு வரமாக, வாடகைத் தாய் முறை அமைந்திருக்கிறது என்றாலும், இந்த மருத்துவக் கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கின்றன.  
  கர்ப்பம் சுமக்கும் காலத்தில், வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
 தவறான முடிவெடுத்துவிட்டோமோ என்ற மன சஞ்சலம் வரலாம்.
  கருவைச் சுமப்பதில் தொடங்கி, குழந்தைப் பிறப்பு வரை, மருத்துவமனையிலோ தம்பதியின் கண்காணிப்பிலோ அல்லது அவர்களது வீட்டிலோ கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இருக்க வேண்டியிருக்கும்.
  தான் பெற்ற குழந்தைகளின் முகத்தைப் பார்க்க அனுமதி இல்லை. ராஜ உபசாரம், கேட்காமலேயே கிடைக்கும் சத்தான உணவுகள்.  ஆனால், ஒரு கவளம் வாயில் வைக்கும்போதே, தன் பிள்ளையை நினைத்து, தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கும். 'என் மகன் என்ன சாப்பிட்டானோ... ஸ்கூலுக்கு ஒழுங்காப் போனானோ... அம்மாவை நினைத்து ஏங்கி இருப்பானோ...’ என்ற கவலை தினம் தினம் வாட்டும். மனதில் கவலை தொற்றிக்கொள்ளும்போது, அதை வெளிக்காட்ட முடியாமல் மன அழுத்தம் வரவும் வாய்ப்பு இருக்கிறது.
  வயிற்றுக்கு வஞ்சனை இல்லையென்றாலும், மன அழுத்தம் ஹார்மோன் பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்.
  கர்ப்பக்காலத்தில் தாயின் ரத்தம்தான் கர்ப்பப்பைக்கும் போகிறது. அந்த நேரத்தில் தாயின் மனநிலையைப் பொறுத்தே, வயிற்றில் இருக்கும் குழந்தையின் மனநிலையும் இருக்கும்.
  தாய்மையின்போது கணவரின் அருகாமையும், அரவணைப்பும்தான் வலிகளை மறக்கச் செய்யும் மருந்து. ஆனால், வாடகைத் தாய் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.
  தாய்மையின் பூரிப்பும் வாடகைத் தாயின் முகத்தில் பிரதிபலிப்பது என்பது குறைவுதான். ஏனெனில், 'பிரசவம் முடிந்து, பணம் கைக்குக் கிடைக்குமா? நம் கஷ்டமெல்லாம் தீருமா? கணவர் தன் மீது அதே அன்போடு இருப்பாரா?’ என்பதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கும்.
 மனதுக்கு இதத்தையும், பொழுதுபோக்கக்கூடிய அம்சங்கள் நிறைந்து நிம்மதியையும் தருவதாக சுற்றுச்சூழல் இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் மனதில், உறவும் சுற்றமும் அருகில் இல்லாமல் இருப்பதே ஏக்கத்தை ஏற்படுத்திவிடும்.''  
- ரேவதி
 சரோகசி முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
 உடல்ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் ஒரு பெண்ணால் குழந்தை பெற முடியாமல் போகும்போது மட்டுமே, அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன் 'சரோகசி’ முறை சிபாரிசு செய்யப்பட வேண்டும்.
 வாடகைத் தாய்க்கு கர்ப்பக்காலத்தில் கொடுக்கப்படும் பண உதவிக்கு, தகுந்த சான்றுகள் இருக்க வேண்டும். கர்ப்பத்தினால் ஏற்படும் செலவுகள் அனைத்துக்கும் பண உதவி அளிக்கப்பட வேண்டும்.
 வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தை, 'இன்னாரின் குழந்தைதான்’ என்று, டி.என்.ஏ. பரிசோதனை நிரூபிக்கப்பட வேண்டும்.
பிரசவித்த பிறகும் பாதிப்புகள்:
 பிரசவித்து வீடு திரும்பிய பெண்ணை, நிறைய வீடுகளில், பணம் கரைந்ததும், ''பணத்துக்காக கர்ப்பப்பையையே விட்டுக்கொடுத்தவள்தானே நீ...'' என்று  மாமியார், நாத்தனாரின் பேச்சுக்கும் ஆளாக நேரும். அந்தப் பெண், குடும்பத்துக்காகச் செய்த மிகப் பெரிய தியாகத்தைக்கூட மறந்துவிட வாய்ப்புகள் அதிகம்.
 பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட முடியாமல் போகும்போது, குழந்தைக்கு, தாய்ப்பால் குடிக்கும் அரவணைப்பு இல்லாமல் போகிறது. வருங்காலத்தில் இது குழந்தையையும் பாதிக்கலாம்.  
 வாடகைத் தாய்க்கு, பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க அனுமதி கிடையாது. ஆணா, பெண்ணா என்பதுகூட தெரிவிக்கப்படாது. அதன் முகம்கூட பார்க்க முடியாமல், ஆசையெல்லாம் நிராசையாகப் போகும்போது, மன அழுத்தத்தால் உடல் நலம் கெட்டு, குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
 இந்திய நாடு... நம் வீடு!
இந்தியாவில் வாடகைத் தாய் தொழிலில் ஓராண்டுக்கு புழங்கும் பணம் பல்லாயிரம் கோடி! இந்தியாவில், வாடகைத் தாய்க்கான முதல் மருத்துவமனை 'அகாங்ஷா’ குஜராத்தில் தொடங்கப்பட்டது.
நாட்டில் வாடகைத் தாய் தொழிலின் மையமாக குஜராத் மாநிலத்தின் சிறுநகரான 'ஆனந்த்’ திகழ்வதால், வறுமையைப் போக்க வந்த வாய்ப்பாக நினைத்து, பல ஏழைத் தாய்மார்கள், தங்கள் கர்ப்பப்பையில் குழந்தைகளைச் சுமக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இங்கு செலவாவதால், பல வெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவை நாடுகின்றனர்.  
 வாடகைத் தாய் முறை
வாடகைத் தாயில், இரண்டு முறைகள் உண்டு. முதலாவது, தம்பதிகளின் உயிரணு, சினைமுட்டை சேர்ந்த கருவைச் சுமப்பது.  இந்த முறை, 'ஜஸ்டேஷனல்’ வாடகைத் தாய் முறை. வாடகைத் தாயாக வரும் பெண்ணுக்கும், குழந்தைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது இரண்டாவது வகை. அதாவது, தம்பதிக்குள், மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் போகும்போது, வாடகைத் தாயாக வரும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாகப் பயன்படுகிறது. இது 'டிரெடிஷனல்’ வாடகைத் தாய் முறை.

Friday, September 13, 2013

''அடுப்பெரிக்கறதுக்கு... வீட்டுக்கூரையை முறிக்காதீங்க''




கோவணாண்டி ''அடுப்பெரிக்கறதுக்கு... வீட்டுக்கூரையை முறிக்காதீங்க''

நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு கோவணாண்டி எச்சரிக்கை!

ஓவியம்: ஹரன் முறையீடு

Thanks to Vikatan

இந்தியப் பொருளாதாரத்துல 'அடிக்கடி கிலி' ஏற்படுத்துற 'பொருளாதார புலி'... செட்டிநாட்டுச் சீமான்... பன்னாட்டு கம்பெனிகளின் 'பவர் ஸ்டார்'... இந்தியாவோட நிதியமைச்சர்... சிதம்பரம் அவர்களுக்கு, வணக்கம் சொல்லிக்கிறான், உங்க பாசக்கார கோவணாண்டி! 'அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’னு காத்திருந்து, பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானதும், நிதியமைச்சர் நாற்காலியை மறுபடியும் கெட்டியா புடுச்சுக்கிட்டீங்க. 'நம்ம ஊர்க்காரரு இம்புட்டு பெரிய பதவியில மறுக்கா உக்காந்து இருக்காரு... நிச்சயம் நாட்டுக்கும் நம்ம ஊரு ஜனங்களுக்கும் நல்லது செய்வாரு’னு நம்பிக்கையோட இருந்தாங்க பல பேரு (இதுல நான் இல்லீங்கோ). அந்த சமயத்துல... 'சிங்கம் களமிறங்கிருச்சிடோய்'னு எங்க ஊரு கதருங்க கத்துன கத்துல, காது ஜவ்வே அந்து போச்சுங்க. ஆனா, 'நான் சிங்கமில்ல, எப்பவுமே சிறு நரிதான்’னு ஒரு வருஷத்துக்குள்ளயே உணர்த்திட்டீங்களே! 'சில்லரை வணிகத்துல பன்னாட்டு கம்பெனிகள் வந்தா, இடைத்தரகர்கள் இருக்க மாட்டாங்க, நேரடி கொள்முதல் செய்வாங்க. அது மூலமா, இந்திய விவசாயி களுக்கு நல்ல விலை கிடைக்கும். உள்ளூரு கோவணாண்டிகள்லாம்... கோடீஸ்வரன்களா மாறிடுவாங்க’னு எங்களுக்கெல்லாம் ஆசை காட்டி, அந்தப் பக்கம் அந்நிய நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள அள்ளிவிட்டு, அந்நிய முதலீட்டை அடுப்படி வரைக்கும் அழைச்சுட்டு வந்திருக்கு உங்க கதர் கெவருமென்ட். இந்த நிலையில, 'அந்நிய முதலீட்டை அதிகப்படுத்த... இன்னும் சில சலுகைகளை அவங்களுக்கு கொடுக்கணும்’னு வக்காலத்து வாங்கியிருக்கீங்களே?


ஆரம்பத்துல எனக்கும் ஒண்ணும் புரியலீங்க. ''சலுகை கொடுக்கணும்னுதானே சொல்றாரு சிதம்பரம். இதுல என்ன தப்பு..?'’னு எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியார்கிட்ட கேட்டேன். மனுஷன் கதர்காரரா இருந்தாலும்... ''அட கேணப்பயலே... அதுல பெரிய தந்திரமே இருக்கு''னு சொல்லி, ஒவ்வொண்ணையும் புட்டுப்புட்டு வெச்சுப்புட்டாருங்க. ''சில்லரை வணிகத்துல அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வரக்கூடாதுனு தேசமே போராடுனப்ப, நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்ல. முதலீடு செய்றவங்க, முதலீட்டுல பாதி பணத்தை (50%) குடோனு, பில்டிங்னு கட்டடமா கட்டணும். உம்ம பாஷையில சொல்லணும்னா அசையா சொத்துல முதலீடு பண்ணுவாங்க. அதனால திடீர்னு அவங்க ஓடிப்போயிட முடியாது. அதேமாதிரி, கண்ட இடத்துல கடையைத் திறந்து சில்லரை வியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டாங்க. 10 லட்சம் மக்களுக்கும் அதிகமா வாழற நகரங்கள்லதான் கடையைத் தொறப்பாங்க. மூணாவது, அவங்க கடைகள்ல 30 சதவிகிதம் இந்தியாவுல உற்பத்தியாகுற பொருளுங்கள விப்பாங்க’னு சொல்லித்தான் அனுமதியை அள்ளிவிட்டாங்க. ஆனா, அதெல்லாம் 'ஆடுகிட்ட ஓநாய் சொன்ன கதை’ங்கிறது அப்ப யாருக்கும் புரியாம போயிடுச்சு. அனுமதி வாங்கிட்டு உள்ள வந்த பிறகு, வாயைத் தொறந்த வால்மார்ட், '50 சதவிகிதம் பணத்தை பில்டிங்ல போடுறதுக்கு நாங்க என்ன முட்டாள்களா?’னு கோவிச்சுக்கிடுச்சு. அதோட '10 லட்சம் மக்கள் வாழுற நகரங்கள்’னு விதிகள்ல இருக்கற வார்த்தையை '10 லட்சத்துக்கு கீழ் மக்கள் வாழுற நகரங்கள்’னு மாத்து. 30 சதவிகிதம் இந்திய பொருட்களை வாங்கி விற்க முடியாது... 20 சதவிகிதம்தான் விற்க முடியும்’னு கண்டிசன்கள வேற போட்டுட்டிருக்கு. 'இப்ப இந்திய உற்பத்தி பொருளுங்கள 20 சதவிகிதம்தான் விப்போம்’னு சொல்றவன்... நாளைக்கு, '100 சதவிகிதம் எங்க பொருளை மட்டும்தான் விப்போம்’னு சொல்லிட்டா, இங்க உற்பத்தியாகுற பொருளையெல்லாம் சுடுகாட்டுலயா விக்க முடியும்''னு வாத்தியாரு போட்ட போடுல... 'ஷாக்' ஆயிட்டேன். ''ரூபாய் நோட்டுல சிரிக்கிற காந்திய மதிக்காம, டாலருக்கு அலைஞ்சாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல முருகன் டாலர் கூட மிஞ்சாது. அந்தளவுக்கு மோசமா இருக்கு அந்நிய செலாவணி கையிருப்பு. நாடு நாசமா போச்சு''னு வயசான காலத்துல வார்த்தைகளாலயே வறுத்துட்டாருங்க அந்த வாத்தியார்.





அய்யா சிவகங்கை சீமானே... அடுப்பு எரிக்கறதுக்கு வீட்டுல விறகு இல்லைனா, வீட்டுக்கூரையை முறிச்சு அடுப்பு எரிக்க முடிவு பண்ணிட்டீங்களே... இது நல்லாவா இருக்கு? 'இன்னிக்கு நிலைமையை சமாளிச்சா போதும்’னு அப்பப்ப நீங்களும்... நிதியமைச்சர் பதவியில உங்கள மாதிரி ஏற்கெனவே உக்கார்ந்திருந்தவங்களும் எடுத்த தப்புத் தப்பான முடிவுகள்தான், இந்தியாவை இத்தனை இக்கட்டுல தள்ளி விட்டிருக்கு. இனியாவது, உள்நாட்டு உற்பத்தியை நம்பி திட்டம் போட்டு, நாட்டை வளப்படுத்த பாருங்க. அதை விட்டுட்டு எல்லாத்தையும் இறக்குமதி செஞ்சுட்டே இருந்தா... 'இந்தியானு ஒரு நாடு இருந்துச்சு. கதர் பெருமை பேசியே, அதை காலி பண்ணிட் டாங்க இந்த காங்கிரஸ்காரங்க’னு வரலாறு காறித் துப்பிடும்... ஜாக்கிரதை! இப்படிக்கு, கோவணாண்டி.

-----

என்னுடைய "சுடுகாட்டுக்கு போறேன்...."  என்ற கதையின் கரு இங்கிருந்து வந்தது!

Sunday, June 9, 2013

விருத்தாசலம் முதல்... திருவாரூர் வரை ஸ்வாஹா...

விருத்தாசலம் முதல்... திருவாரூர் வரை ஸ்வாஹா...


இதை கருவாக கொண்டு முயற்சித்த சிறுகதையே

பசியா... பஞ்சமா...மூச்! இல்லவே இல்லை

 

 
காவிரி படுகையைக் காவு வாங்கும் மீத்தேன்..!
 
நன்றி - பசுமை விகடன்: கரு.முத்து, கு. ராமகிருஷ்ணன் படங்கள்: சீ. குணசீலன்
பிரச்னை

 ரோம் நகர் பற்றி எரிந்தபோது... பிடில் வாசித்த நீரோ மன்னன் மனநிலையில்தான் நம் நாட்டை ஆள்பவர்களும் இருக்கிறார்களோ... என்னவோ? வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரில், அவர்களின் செய்கைகள்தான், நமக்கு இந்த அளவு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. புதிதாக ஒரு வளத்தை உருவாக்குவதுதான் வளர்ச்சி. அதுதான் சரியும்கூட. இது அறிவில்லாதவன்கூட அறிந்து வைத்திருக்கும் உண்மை. ஆனால், ஒன்றை அழித்து... இன்னொன்றை உருவாக்குவதைத்தான் வளர்ச்சி' என்று எந்த அடிப்படையில் அரசாங்கம் நினைக்கிறது என்று புரியவில்லை.
 
பசுமை விமான நிலையம், சாலை விரிவாக்கம், புதிய பேருந்துநிலையம், விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்... என வளமான விவசாயப் பகுதிகளுக்கு வேட்டு வைத்த பல திட்டங்களைப் பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ள 'காவிரி படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்’, டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தில், வெடிகுண்டை வீசியிருக்கிறது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதி தொடங்கி, அரியலூர் மாவட்டத்தில் ஜெயம்கொண்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம் வரையிலான வளமான பகுதிகளில் நிலத்தடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க உரிமை பெற்றிருக்கிறது, 'கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்கிற நிறுவனம். இப்பகுதியில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்காமல், எந்தவிதமான தகவல்களையும் தெரிவிக்காமல் இத்திட்டத்துக்கு, அனுமதி வழங்கிஇருக்கிறது, மத்திய அரசு.
 
'இங்கு கிடைக்கும் மீத்தேன் வாயு, விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படும்’ என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. அதைக் கண்டித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கைவிட்ட பிறகுதான், இப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப் போவதே இப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.
 
இதைப்பற்றிப் பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 'சுவாமிமலை’ சுந்தர.விமலநாதன், ''காவிரியில் தண்ணீரின்றி டெல்டா பகுதிகள் பாலைவனமாகப் போய்விட்டன. இதற்கிடையில் ஓஎன்ஜிசி என்கிற பெயரில் ஆங்காங்கே பெட்ரோல் எடுக்க ஆரம்பித்து, நிலத்தடி நீராதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிவிட்டனர். இப்போது, மீத்தேன் எடுக்க அனுமதி கொடுத்து இதை பூகம்பப் பகுதியாகவும் ஆக்க முடிவெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இப்போது உள்ள நிலவரப்படி, கிழக்கு கடற்கரையிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரம் வரை கடல் நீர் நிலத்துக்குள் ஊடுருவி இருக்கிறது, என்கிறார்கள் வல்லுனர்கள். இந்நிலையில், நன்கு விளையக்கூடிய வளமான பகுதியை... மீத்தேன் வாயு நிறைந்த பகுதி என்று கண்டறிந்துள்ளனர். என்னாளும் பொன் விளையும் அந்தப் பகுதியில் மீத்தேன் எடுக்க, முதலில் மேல் மண்ணை அகற்றிவிட்டு, பிறகு அடியில் உள்ள நிலத்தடி நீரை வெளியேற்றுவார்கள். இந்த இரண்டையும் அப்புறப்படுத்திய பிறகுதான் உள்ளே இருக்கும் நிலக்கரியையோ மீத்தேன் வாயுவையோ எடுக்க முடியும். விவசாயத்துக்கு ஆதாரமான மண்ணையும் நீரையும் அகற்றி விட்டால் விவசாயம் என்னவாகும்?'' என்று கோபம் பொங்கக் கேட்டார்.
 
''மீத்தேன் வாயு எடுக்கப்படும் நிலங்கள் மட்டுமல்லாது, அது குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வழியெங்குமே விவசாயம் முழுக்க பாதிக்கப்படும். காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர திராணியற்ற அரசுகள், இப்படி பெட்ரோல், மீத்தேன் என்றெல்லாம் எடுத்து, ஒரேயடியாக நிலங்களை தரிசாக்கி... விவசாயிகளை வெளியேற்றத் தீர்மானித்துவிட்டன என்றுதான் தெரிகிறது. 'கெயில்' நிறுவனத்துக்கு எதிராக மேற்கு மண்டல விவசாயிகள் போராடியதை போல பல மடங்கு அதிக எதிர்ப்பைக் காட்டி இத்திட்டத்தை விரட்டியடிப்போம்'' என்று சொன்னார் வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன்.
 
இந்நிலையில், இத்திட்டத்தைக் கண்டித்து, 'காவிரி படுகையை விழுங்க வரும் மீத்தேன் எடுக்கும் திட்டம்’ என்கிற தலைப்பில் கடந்த 4-ம் தேதி தஞ்சாவூரில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. 'பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உரையாற்றினார்கள்.
 
'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் பேசும்போது, ''காவிரி படுகையில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் வரப்போகிறது. 500 அடி முதல் 1,500 அடிக்கும் அதிகமான ஆழத்தில் குழி தோண்டி, தண்ணீரை வெளியேற்றிவிட்டு, மீத்தேன் எடுப்பார்கள். இதனால் பூமியில் மிகப்பெரிய அளவில் வெற்றிடம் உருவாகி, நில நடுக்கம் ஏற்படும். ஈராக் போன்ற நாடுகளில் பெட்ரோலுக்காக குழி தோண்டியதால்தான், அங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது. தமிழகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திப் பகுதியான காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணவு உத்தரவாதமும் கேள்விக்குறியாகும். கடல்நீர் உள்ளே புகுந்து, விளைநிலங்கள் அனைத்தும் உப்பளங்களாக மாறும். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய  வாழ்வாதாரங்களை இழந்து அநாதைகளாக அலையக்கூடிய அவலநிலை உருவாகும்.
 
நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக, விளைநிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தியபோது, 'விவசாயிகளுக்கு மாற்று நிலம் தருவோம், வீடு தருவோம், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை தருவோம்’ என உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், அவற்றில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. நிலங்களை இழந்த விவசாயிகள், அநாதைகளாக திரிகிறார்கள். அதேநிலைதான் காவிரி படுகை விவசாயிகளுக்கும் ஏற்படும்.
 
2010-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகள் கழித்துதான் நமக்கு தெரியவந்துள்ளது. மக்களிடம் ஒப்புதல் வாங்கித்தான் எந்த ஒரு பெரிய தொழில் நிறுவனத்தையும் தொடங்க வேண்டும். மீத்தேன் எடுப்பதற்காக, முதல்கட்டமாக 50 இடங்களில் கிணறு தோண்டப் போகிறார்கள். இதற்கான பணிகள் நடைபெறும் இடங்களிலேயே நேரடியாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி, தடுத்து நிறுத்துவோம்'' என்றார், ஆவேசமாக.  
 
பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தைச் சேர்ந்த லெனின், திருநாவுக்கரசு, அரங்க குணசேகரன், காவிரி பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.என்.எஸ். தனபாலன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பொன்னையன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
இனி, விவசாயம் செய்வதைவிட, வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக போராடுவதற்குத்தான் விவசாயிகளுக்கு நேரம் சரியாக இருக்கும் போலிருக்கிறது!


மேலும் இது தொடர்பாக:


  
பாலை நிலமாக மாறப்போகும் திருவாரூர், தஞ்சை பகுதிகள்



பாழாகும் விளைநிலங்கள்

----------------

SA_2_PolicyBrief_Food_Security.pdf

IJSST

-----------------



 
மீத்தேன் அரக்கன்!
 
காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்
 
நன்றி - விகடன் (12 May 2014)
 
 
பாரதி தம்பி
ஓவியங்கள்: ஹாசிப்கான், படங்கள்:கே.குணசீலன்
பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.
மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!  
 
பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.
அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.
நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!  
மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது...
''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.
ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.  
காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு?
இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு.
''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால்,                  35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம்.
மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால்          தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.
திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த  40 ஆண்டுகளுக்கும்  மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்?
இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்!  
''அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்'' என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார்.
''இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா... இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.
எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். 'விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை.
கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன... பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது 'வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம்  ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!

கூடங்குளம் தரும் படிப்பினை!
சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம்.
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ''மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!'' என்றார்.
கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
 கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
  கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!

‘தேசிய நீர்கொள்கை, 2012’
 
‘தேசிய நீர்கொள்கை, 2012’ நாம் கண்டிப்பாக தெரிந்துக்கொண்டு யோசிக்கவேண்டிய கட்டாயத்தில் நம்மை கொண்டு நிறுத்தியுள்ளது.

இத்திட்டத்தை பற்றி அறிய முந்தையது மற்றும் புதியது:
DraftNWP2012_English9353289094.pdf
 

இத்திட்டத்தை தயாரித்த அங்கத்தினர்கள் யார் என்று மேலே கொடுத்துள்ளதில் ஒரு குறிப்பும் இல்லை, ஏன்?

மேலும் கூடுதல் விவரங்களுக்கு

Indian-states-adopt-national-water-policy-2012


தமிழில்


ஜெயமோகனின் கட்டுரை  உயிர்வேலி பற்றியது. இது மிகவும் முக்கியமான கட்டுரை, பல கருத்துக்களை அறிய முடியும், மீண்டும் நம் நிலை எங்கு செல்லும் என்று யோசிக்க தூண்டுகோலாக இருக்கும் கட்டுரை. யோசிப்போமா?

பலர் கட்டுரைகளாக மக்களுக்கு கொண்டுசெல்லும் கருத்தை நான் இங்கு கதையாக சொல்ல முயற்சித்ததே



என்னதான் சுத்தமான காற்றை வாங்க முடியும் என்றாலும்கூட மக்கள் கண்டிப்பாக வாங்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. இன்று நீரை பொருள்/பண்டமாக பார்க்கும் அரசாங்கம் நாளை காற்றையும் அவ்வாறு பார்க்காது என்பது என்ன நிச்சயம்?